Thursday, April 18, 2024
Home Blog

ஸுரதுத் தீன் !

“அத்தியின் மீதும், ஸைதூனின் மீதும், தூர் ஸீனீன் மீதும் பாதுகாப்பான இந்த நகரின் மீதும் சத்தியமாக, மனிதனை நாம் மிகச் சிறந்த (அக,புற) வடிவில் படைத்தோம், பின்னர் (நன்றி மறந்து நிராகரிக்கும் அவனை) படைப்பினங்களில் மிகவும் கீழ்த்தரமான படைப்பாக ஆக்கி விடுகிறோம், ஆனால் ஈமான் கொண்டு ஸாலிஹான நல்லமல்கள் புரிவோரைத் தவிர, அவர்களுக்கு நிலையான நற்கூலி இருக்கின்றது, (இத்தகைய அத்தாட்சிகளை அறிந்த) பின்னரும் சன்மார்க்கம் பொய்யானதென உமக்கு தோன்றக் காரணம் ஏது?, (இத்தகைய வல்லமையை அத்தாட்சிகளை கொண்ட) அல்லாஹ் நீதியாளன் இல்லையா? ” (ஸூரதுத் தீன்)

இது அல்குர்ஆனில் ஸூரதுத் தீன் எனும் மக்கிய அத்தியாயத்தின் கிட்டிய பொருளாக்கமாகும், இந்த ஸூரா அல்லாஹ் நீதியாளன் இல்லையா என்ற ஆச்சரியக் (கேள்விக்) குறியுடன் நிறைவுறுவதால்..

“ஆமாமாம் நிச்சயமாக, நாம் அதற்கு சான்று பகர்கின்றோம்.” என கூறிக் கொள்ளுமாறு எமது உயிரிலும் மேலான தலைவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளதாக நபித் தோழர் அபூஹூரைரா (ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள்..

அத்தி, ஸைதூன், தூர் ஸீனா என பைதுல் மக்திஸையும் அது அமைந்துள்ள பிரதேசத்தையும், மூஸா (அலை) அவர்களோடு அல்லாஹ் பேசிய மலை அடிவாரத்தையும், புனித மக்கமா நகரையும் எடுத்துக் கூறி சத்தியம் செய்வதின் பின்னணி அஹ்லுல் கிதாபி களுடைய நபிமார்களான நபி ஈஸா (அலை), நபி மூஸா (அலை) மற்றும் இறுதி இறைதூதர் முஹம்மத் (ஸல்) மற்றும் ஏனைய நபிமார்கள் எல்லோருக்குமே அருளப்பட்ட மனித வர்க்கத்திற்கான தூதுகள் அடிப்படையில் ஒன்றென உணர்த்துவதற்காகும் என பல தப்ஸீர் ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

அதே போன்று அத்தி ஸைதூன் என மனிதனது வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்தையும் அவனுக்கு வசப்படுத்திய அல்லாஹ்வின் வல்லமையையும் அது நினைவுட்டுவதாகவும் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன!

உன்னதமான படைப்பினமாகிய மனிதன் தானாகவே நன்றி மறந்து இறை நிராகரிப்பு செய்து தனது உன்னதத் தன்மையை இழந்து கீழ்மட்ட படைப்பினமாக ஆகிவிடுகின்றான்.. அன்றியும் அவனை அநியாயமாக அல்லாஹ் தண்டிப்பதில்லை! என்ற வாழ்வியல் யதார்த்தத்தை இந்த அத்தியாயம் உணர்த்துகின்றது.

அல்லாஹ் வின் கலாம் அல்குர்ஆன் ஸூராக்களை வசனங்களை பொருளுணர்ந்து ஓதி அதன்படி வாழ்ந்து உன்னதமான மனிதர்களாக பிறவிப் பயனை ஈருலக ஈடேற்றங்களை அடைந்து கொள்ள அவ்வல்லோன் எம்மனைவருக்கும் தவ்பீஃக் செய்வானாக!

உங்களது ஆத்மார்தாதமான துஆக்களில் எம்மை எமது பெற்றார் உடன் பிறப்புக்கள் மனைவி மக்கள் ஆசான்கள் நாம் பிரார்தனை செய்யக் கடமைப் பட்டோர் அனைவரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதனை ஒரு ஸதகதுல் ஜாரியாவாக அதிகமதிகம் பகிர்ந்து பணியில் பங்காளராகுங்கள்!
🤍
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
09.08.2022

இறை தூதர் (ஸல்) அவர்களது முதலாவது (இராஜதந்திரி) தூதுவர்!

அந்த இளைஞர், குழந்தைப் பருவம் முதல் மிகவும் செல்லமாகவும் செழிப்பாகவும் சகல வசதி வாய்ப்புக்களுடன் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர், அவரது அழகும்,வசீகரமும், அறிவும் தெளிவும், தூய்மையும் அவர் அணியும் விலை உயர்ந்த ஆடைகளும் அவர் உபயோகிக்கின்ற விலை உயர்ந்த வாசனைத் திரவியங்களும் மக்கா வாசிகள் மத்தியில் அவருக்கு தனித்துவமான அடையாளத்தையே தந்திருந்தன.

அவர் இயல்பாக பெற்றிருந்த அறிவும் ஆற்றலும் பேச்சுத் திறனும் எந்தவொரு சபையிலும் அவருக்கு பெரும் வரவேற்பை பெற்றுத் தந்திருந்தன.

இறைதூதர் (ஸல்) அவர்களது நுபுவ்வத் மக்காவாசிகள் மத்தியில் பரபரப்பான பேசுபொருளாக இருந்த ஆரம்ப நாட்களில் அர்கம் எனும் நபித் தோழர் இல்லத்தில் இறைதூதரை சந்தித்து தெளிவு பெற்று இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார்கள்.

என்றாலும், செல்வாக்கு மிக்க குடும்பத்தில் செல்வாக்கு மிக்க தனது தாயாரின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொள்ள விரும்பாது இஸ்லாத்தை ஆரம்ப நாட்களில் மறைத்தாலும் பின்னர் வீட்டில் இருந்து சகல சம்பத்துகளையும் சுக போகங்களையும் துறந்து வெளியேறும் நிலை ஏற்படுகிறது.

இரண்டு முறை அபீசீனியா ஹபஷாவிற்கு ஹிஜ்ரத் சென்று திரும்புகிறார்கள், பசி பட்டினி, வறுமையின் உச்சத்தில் ஒட்டுப் போடப்பட்ட ஆடைகளுடன் காட்சி தருகின்றார்கள்.

அவரது அறிவு ஆற்றல் திறமை கண்டு யத்ரிப் மாநகரிற்கு (தற்போதைய மதீனமாநகர்) இறைதூதர் (ஸல்) அவர்களது முதலாவது பிரதிநிதியாக அனுப்பி வைக்கப் படுகின்றார்.

நபுவ்வத் 11 ஆம் ஆண்டு துல்ஹஜ் மாதம் மதீனாவில் இருந்து வருகை தந்த கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்த சிலர் மினா வெளியில் இறைதூதருடன் அகபா என்ற இடத்தில் உடன்படிக்கை செய்து கொண்டு மதீனா திரும்பி இருந்தனர், அவர்களுடன் இணைந்து தனது பணிகளை மேற்கோண்ட அந்த நபித் தோழர் நுபுவ்வத் 12 இல் சுமார் 70 மதீனா வாசிகளுடன் இறைதூதரை துல்ஹஜ் மாதம் சந்திக்கின்றார்கள்.

தொடர்ந்து யத்ரிப் மாநகர் நோக்கி ஹிஜ்ரதுர் ரஸூல் இடம் பெறுகிறது, அந்நகரின் பெயர் மதீனதுர் ரஸூலில்லாஹ் எனப் பெயரும் பெறுகிறது.

குறைஷிக் காஃபிர்கள் தொல்லை அதிகரிக்கிறது, பத்ர் யுத்தம் நடை பெற்று அடுத்த கட்டமாக உஹத் யுத்தம் இடம் பெறுகிறது..

இறைதூதர் ஸல் அவர்களை எதிரிகள் சுற்றி வளைத்த போது தனது வலக்கரத்தில் கொடியை ஏந்திய வண்ணம் அந்த இளம் நபித் தோழர் ஏனைய வீரர்களுக்கு அறைகூவல் விடுத்த வண்ணம் ஓடோடி வருகின்றார் நபியவராகள் சிறிய காயங்களுடன் காப்பாற்றப் படுகிறார்கள்..

எதிரிகளுடன் போராட்டம் தொடர்கிறது நபியவர்களது சிறிய தந்தை உற்பட பலர் ஷஹீதாக்கப் படுகிறார்கள்.

கொடியை ஏந்தியிருந்த நபித் தோழரின் வலக்கரம் வெட்டப் படுகிறது, இடக்கரத்தில் ஏந்திக் கொள்கிறார்கள், இடக்கரம் வெட்டப்பட மார்பினால் தாங்க முயற்சித்து பின்னர் எதிரிகளின் அம்புகளுக்கு இலக்காகி ஷஹீதாகு கின்றார்கள்…

யுத்த களத்தில் ஷூஹதாக்களுடைய ஜனாஸாக்கள் தேடி நல்லடக்கம் செய்யப்பட்ட போது அந்த ஸஹாபியை கபனிடுவதற்கு ஒரு போர்வை மாத்திரமே இருந்தது, அதனால் தலைக்கு கீழ் பகுதியை கபன் செய்து தலைப்பகுதியை இலைகளால் மறைக்குமாறு இறைதூதர் ஸல் ஆலோசனை கூறுகின்றார்கள்..

பின்னர் ஷுஹதாக்களுக்குரிய இறுதிக் கடமைகளை நிறைவேற்றிய இறைதூதர் ஸல் அவர்கள்..

அல்லாஹ்வுடன் தாம் செய்து கொண்ட உடன்படிக்கையை நிறைவேற்றிய சில வீரர்கள்.. என்ற அல்குர்ஆன் வசனத்தை ஓதி விட்டு..

இந்த ஷுஹதாக்களுக்காக துஆ செய்து ஸலாம் சொல்லுங்கள், நிச்சயமாக அவ்வாறு ஸலாம் சொல்வோருக்கு பதில் சொல்லப்படும் என உபதேசம் செய்தார்கள்..!

இன்றுவரை ஹஜ் உம்ரா யாத்திரைக்கு செல்பவர்கள் உஹத் களத்திற்கு சென்று ஷுஹதாக்களுக்காக பிரார்த்தனை செய்து ஸலாம் கூறி வருகின்றார்கள்.

மக்காவில் செல்வச் செழிப்புடன் அழகிய ஆடைகள் நறுமணங்களுடன் வாழ்ந்து மதீனா மாநகரில் உஹத் களத்தில் கபன் துணி கூட போதாமல் உலகிற்கு விடை தந்த அந்த நபித் தோழர் வேறு யாருமல்ல..

முஸ்அப் இப்னு உமைர் (ரழி) அவர்கள், அத்தகைய உன்னதமான தியாகிகளின் அர்ப்பணங்கள் மீது தான் உலகெங்கும் வாழ் எங்களுக்கு இனிய மார்க்கம் இஸ்லாம் கிடைத்திருக்கிறது.
🤍
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
10.08.2022 SHARE

எல்லாம் இருந்தும் அல்லாஹ் இன்றேல் ஒன்றும் இல்லை!

இறைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்களைப் பார்த்து குறைஷிக் காபிர்கள் ஏளனமாக பல விடயங்களை கூறினார்கள் என்பதனை நாம் அறிவோம்..

தன்னை ஒரு நபியாக பிரகடனம் செய்ததன் பின்னர் குறைஷி குலத்தில் இருந்து உறவுகள் துண்டிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டவர் என்றும்..

தனது மகன் காஸிம் (அலை) வபாஃத் ஆனதன் பின் ஆண் வாரிசுகளற்ற, பெயர் சொல்ல சந்ததிகளற்ற ஒரு மனிதர் என்றும் ..

உலகத்தில் குல வம்ச பெருமைகள் இழந்த ஆட்சி அதிகாரம் செல்வம் செல்வாக்கு அற்ற முகவரியற்ற தனியாளாக தனிமைப்படுத்தப் பட்ட ஒருவர் என்றும், அவர்கள் கூறி நோவினை செய்வார்கள்..

நபித்தோழர் அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், ஒருமுறை இறைதூதர் (ஸல்) அவர்கள் சிறிய மயக்க நிலையின் பின் புன்னகைத்துக் கொண்டு விழித்தார்கள்.. காரணத்தை கேட்ட பொழுது எனக்கு தற்போது ஒரு ஸூரத் அருளப்பட்டது எனக்கூறி “இன்னா அஃதய்னாக அல் கவ்தர்” எனும் சிறிய ஸூராவை ஓதினார்கள்..

(நபியே) உமக்கு நாம் அல்கவ்தரை தந்துள்ளோம், நீர் உமது இரட்க்ஷகனை தொழுது குர்பானியையும் அறுத்துப் பங்கீடு செய்வீராக, உம்மைத் தூற்றுபவர் தான் நிச்சயமாக “அப்தர்” ஆவார்.

இங்கு சொல்லப்பட்டுள்ள கவ்தர் அப்தர் என்ற ஒன்றுக்கொன்று எதிர்ச் சொற்கள் குறித்து பல அறிவிப்புக்களை விளக்கங்களை தப்ஸீர் ஆசிரியர்கள் கூறியுள்ளார்கள்..

கவ்தர் என்றால் அதிகரித்த செல்வம் என்றும் அப்தர் என்றால் எதுவுமற்ற அனைத்தையும் இழந்த நிலை என்றும் அன்றைய அரபு மொழி பிரயோகங்கள் காணப்பட்டதாக மொழியியல் விளக்கம் தரப்பட்டுள்ளது.

நுபுவ்வத், இஸ்லாம், அல்குர்ஆன், தொழுகை உற்பட ஐம்பெரும் கடமைகள், இறுதிநாள் வரையும் அதற்குப் பிறகும் பெயர் கூறப்படல், ஸலவாத்தும் ஸலாமும் சொல்லப்படல், மறுமையில் ஷபாஅத்து செய்யும் தனிச் சிறப்பு, சுவனத்தில் ஹவ்ழுல் கவ்தர் எனும் தடாகம் என இம்மை மறுமையில் இறை தூதர் ஸல் அவர்களுக்கு தரப்படும் அனைத்து அதிகரித்த அருட் கொடைகளையும் அல் கவ்தர் எனும் பிரயோகம் குறிப்பதாகவும்..

உலகில் சாதி குலப் பெருமை வம்சாவழி வாரிசுகள், ஆட்சி, அதிகாரம், செல்வம் செல்வாக்கு எல்லாம் இருந்தும் அல்லாஹ் வும் அவனது தீன் இஸ்லாமும் இல்லாத நிலையே அப்தர் எனும் அனைத்து சம்பதாதுக்களும் துண்டிக்கப்பட்ட நிலை என்றும் தப்ஸீர் வியாக்கியானங்கள் கூறுகின்றன.

ஆகவே இம்மை வாழ்வில் ஈடேற்றம் பெற்ற இறை தூதர் ஸல் அவர்களது உம்மத்தைச் சேர்ந்தவர்கள் நாளை மறுமையிலும் சுவனத்திலும் அவர்களோடு இருப்பார்கள், இறைதூதர் (ஸல்) அவர்களுக்கு விசேடமாக தரப்படும் ஹவ்ழுல் கவ்தர் எனப்படும் தடாகத்தில் அல்லது அருவியில் இருந்து நீர் அருந்துவார்கள்…!

ஆக, எமது உயிரிலும் மேலான தலைவருக்கு இம்மை மறுமைப் பேருகளாக தரப்பட்ட அல்கவ்தரில் அவர்களது உம்மதாதாகிய எமக்கும் பங்கு நிச்சயமாக இருக்கின்றது என்பதனை ஹவ்ழுல் கவ்தர் தடாகம் பற்றிய அறிவிப்புக்கள் உணர்த்துகின்றன.

எனவே, துன்யா ஆகிராவின் அனைத்து அருட்பாக்கியங்களையும் அதிகமதிகமாக, அல்கவ்தர் எனும் வற்றா நீரூற்றாகப் பெற்ற முழுமதியாம் முஹம்மத் (ஸல்) அவர்களை நிராகரித்தவர்கள் அவர்தம் வழி நடக்காதவர்கள் தான் எல்லாம் இருந்தும் அனைத்தையும் இழந்த அப்தர்கள் என இந்த அத்தியாயம் எமக்கு வாழ்வின் யதார்த்த நிலையை கற்றுத் தருகிறது.

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
11.08.2022

அல்லாஹ் ரஸூல் மீதான விசுவாசம் பொது வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும்!

தமீம் இப்னு அவ்ஸ் அத்தாரி (ரழி) அவர்கள் கிரிஸ்தவத்திலிருந்து ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டு இஸ்லாத்தை தழுவிய ஒரு நபித் தோழர், தஜ்ஜால் குறித்து அவர் அறிவித்த ஒரு தகவலை இறைதூதர் (ஸல்) அவர்கள் உறுதிப்படுத்திய ஹதீஸ் பிரபலமானது, ஹிஜ்ரி 40 இல் பலஸ்தீனில் வபாஃத் ஆனார்கள்.

அவர்கள் அறிவித்த ஒரே ஒரு ஹதீஸ் தான் முஸ்லிம் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது, ஒருமுறை இறைதூதர் (ஸல்) அவர்கள் எம்மிடம் மூன்று முறை “அத்தீனுன் நஸீஹத்” என கூறினார்கள், அப்படி என்றால் என்ன என்று வினவிய பொழுது அல்லாஹ்விற்கும் அவனது ரஸூலிற்கும் அவனது கிதாபிற்கும், ஆட்சி, நிர்வாக தலைமைகளிற்கும், பொது மக்களிற்கும் நஸீஹத் செய்வது என விளக்கம் தந்தார்கள் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பொதுவாகவே நஸீஹத் என்றால் நல்லுபதேசம் என்று தான் பிரயோகிக்கப் படுகிறது, என்றாலும் இந்த ஹதீஸ் சற்று பரந்த கருத்தாழமிக்க ஹதீஸ் என்பதனை ஹதீஸ் துறை விற்பன்னர்கள் வியாக்கியானம் செய்துள்ளார்கள்.

“நஸஹ, நஸூஹ், நுஸ்ஹ் ” என்ற அரபு மொழிப் பிரயோகம் தூய்மை, சுத்தம், அப்பழுக்கற்ற தன்மை என்பதனை குறிப்பதாக மொழியியல் வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.

அல்லாஹ்வுடன், அவனது தூதருடன், அல்குர்ஆனுடன் உளத் தூய்மையுடன், இதய சுத்தியுடன் ஆத்மார்த்தமாக உண்மையாக நேர்மையாக ஆழமான உறுதியான நம்பிக்கை விசுவாசத்துடன், ஷிர்க்கு, குஃப்ரு, நிபாக்கு நயவஞ்சகம் இன்றி நடந்து கொள்வதும் வழிப்படுவதும் நஸீஹத் என விளக்கம் தரப்பட்டுள்ளது.

அதே போன்று ஆட்சி நிர்வாக தலைமைகளுடனும் பொது மக்களுடனும் உண்மையாக நேர்மையாக இதய சுத்தியுடன் விசுவாசமாக நடந்து கொள்வது, உண்மையை நன்மையை நீதி யை நிலை நிறுத்த ஒத்துழைப்பது.

அநீதி அராஜகம், அக்கிரமம், அடக்குமுறைகளுக்கு எதிராக எழுந்து நிற்பது, நன்மைகளை ஏவி தீமைகளை தடுப்பது நல்லுபதேசங்கள் செய்வது அவர்கள் பால் உள்ள நஸீஹத் ஆகும்.

அவர்களை நயவஞ்சகத் தனமாக ஏமாற்றுவது சூழ்ச்சிகள் செய்வது, வரியிறுப்பாளர்கள் பொதுமக்களை நேரடியாக மறைமுகமாக சூரையாடுவது, அராஜகம் அநீதி அக்கிரமங்களுக்கு ஊழல் மோசடிகளுக்கு துணை நிற்பது எல்லாமே சன்மார்க்க முரணான செயற்பாடுகளாகும்.

அல்லாஹ்விற்கும் ரஸூலிற்கும் அல்குர்ஆனிற்கும் ஆத்மார்த்தமான இதய சுத்தியுடன், உளத்தூய்மையுடனான விசுவாசத்தை வழிப்படுதலை கொண்டுள்ள ஒரு சமூகம் ஆட்சியாளர்கள் தலைமைகள் பொதுமக்களது விவகாரங்களில் உண்மையாக நேர்மையாக இதய சுத்தியுடன் நடந்து கொள்ளா விட்டால் அவர்களது தீன் பூரணமாவதில்லை அங்கு கோளாறு இருக்கின்றது என்பதனை இந்த நபிமொழி எமக்கு உணர்த்துகிறது.

ஈமான் கொண்டு ஸாலிஹான நல்லமல்கள் புரிந்து தமக்கு மத்தியில் சத்தியத்தை சகிப்புத் தன்மையை நல்லுபதேசம் வஸிய்யத் செய்து கொள்வோரன்றி அனைவரும் நஷ்டத்தில் தோல்வியில் இருப்பதாக அல்குர்ஆனும் எமக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதனை நாம் அறிவோம்.

உங்கள் ஆத்மார்த்தமான துஆக்களில் எம்மையும், எமது பெற்றோர், உடன் பிறப்புக்கள், மனைவி மக்கள், ஆசான்கள், ஆத்மார்த்தமாக அறப்பணிகள் புரிவோரையும் நினைவில் கொள்ளுங்கள்.
🤍
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
13.08.2022 SHARE

கடன் ஒரு அமானிதம் அதனை உரியவர்களிடம் திருப்பிக் கொடுத்து விட வேண்டும்.

அமானிதங்களை நிறைவேற்றுவது ஈமானிய பண்புகளில் உள்ளதாகும். இந்தப் பண்பு யாரிடம் இல்லாமல் ஆகி விடுகின்றதோ அவர் இறை நம்பிக்கையாளர் என்ற பட்டியலிலிருந்து விலகி நயவஞ்சகர் பட்டியலில் சேர்ந்து விடுகின்றார்.
 
கடன்பெற்று மோசடி செய்வோரிடம் நயவஞ்சகர்களது மூன்று பண்புகளும் இருக்கின்றன.
“நயவஞ்சகனின் அறிகுறிகள் மூன்று; பேசினால் பொய்யே பேசுவான், வாக்களித்தால் மீறுவான், நம்பினால் துரோகம் செய்வான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புஹாரி 33
 
கடன் கொடுத்தவர் மன்னித்தாலன்றி கடனுடன் மரணிப்போரின் நன்மைகள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை பாவங்கள் மன்னிக்கப் படுவதில்லை அவர் இறைபாதையில் ஷஹாதத் எய்தியவராயினூம் சரியே!
 
“அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்த ஷஹீதுக்கு கடனை தவிர எல்லாப் பாவங்களும் மன்னிக்கப் பட்டுவிடுகின்றன” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 3498
 
கடன்பட்ட ஒருவரின் ஜனாஸாவுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுவிக்க மறுத்து விடுகின்றார்கள், உடனே அபூகதாதா (ரலி) பொறுப்பேற்றதும் நபி (ஸல்) அவர்கள் தொழுவித்தார்கள் என்ற செய்தியை புஹாரியில் காண முடிகின்றது.
 
திரும்பக் கொடுக்கக் கூடாது என்ற கெட்ட எண்ணத்தை உள்ளத்தில் மறைத்து வைத்துக் கொண்டே ஒரு பொருளை வாங்குவதற்குப் பெயர் கடன் அல்ல, அது மோசடியாகும், இத்தகைய மோசடிக் காரர்களால் உண்மையில் கடன் வாங்கி திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற தூய்மையான எண்ணத்தில் கேட்பவர்களும் பாதிக்கப்பட்டு விடுகின்றார்கள்.
 
“அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்த ஷஹீதுக்கு கடனை தவிர எல்லாப் பாவங்களும் மன்னிக்கப் பட்டுவிடுகின்றன” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 3498
 
என்றைக்கு வசதி வந்து விடுகின்றதோ அன்றைக்கு கடனைத் திருப்பிச் செலுத்துவது கடமையாகி விடுகின்றது. “வசதிபடைத்தபின் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடிப்பது அநீதியாகும், உங்களில் ஒருவரது கடன் ஒரு செல்வந்தன் மீது மாற்றப்பட்டால் அவர் (அதற்கு) ஒத்துக் கொள்ளட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 2287, 2288, 2400, முஸ்லிம் 2924
 
மோசடி செய்யும் தீய எண்ணத்தில் கடன் பெறுவோரது செல்வத்தை தொழில் முயற்சியை அல்லாஹ் அழித்து விடுவான், திருப்பிக் கொடுக்கும் நல்லெண்ணத்தில் பெறுவோரது செல்வத்தில் விருத்தியை ஏற்படுத்துகிறான், ஏமாற்றுப் பேர்வழிகளின் எண்ணம் போன்றே அல்லாஹ்வும் அவர்களுக்கு கைவிட்டு விடுகிறான்.
 
“யார் மக்களின் பொருளை திரும்பக் கொடுக்க வேண்டும் என்று எண்ணி கடன் வாங்குகின்றாரோ, அவர் சார்பாக அல்லாஹ்வே அதனை திருப்பிச் செலுத்துவான், யார் அதை அழித்து விட வேண்டும் என்று எண்ணி (ஏமாற்றி) கடன் வாங்குகின்றாரோ அதை அல்லாஹ் அழித்தே விடுகின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  நூல்: புஹாரி 2387
 
கடனை அதிகாரமாக கேட்பதற்கு, கடன் கொடுத்தவருக்கு உரிமை உண்டு:
 நபி ஸல் அவர்களிடம் ஒருவர் வந்து, தான் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டார், அப்போது அவர் சற்று கடுமையான வார்த்தைகளைப் பேசினார், இதைக் கண்ட நபித்தோழர்கள் வருத்தப்பட்டனர், அதற்கு நபி ஸல் அவர்கள் அவரை விட்டுவிடுங்கள் பொருளுக்குரியவர் பேசுவதற்கு உரிமையுண்டு” என்று கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புஹாரி: 2401
 
ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்திக்கும்போது, இறைவா, பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன், என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி ஸல் அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே, தாங்கள் கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்பத் தேடுவதற்குக் காரணம் என்ன? என்று கேட்டதற்கு நபி ஸல் அவர்கள்: மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான், என்று பதிலளித்தார்கள்.
நூல்; புஹாரி 2397
 
ஒருமுறை தொழுகை நடத்துவதற்காக ஒரு ஜனாஸா கொண்டுவரப்பட்டது, ‘இவர் கடனாளியா?’ என்று நபி ஸல் அவர்கள் கேட்டபோது. நபித்தோழர்கள் ‘இல்லை!” என்றனர். அவருக்கு நபி ஸல் அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.
 
பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது ‘இவர் கடனாளியா?’ என்று நபி ஸல் அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் ‘ஆம்!’ என்றனர், நபி ஸல் அவர்கள் ‘அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்!” என்றார்கள்.
 
அப்போது அபூ கதாதா(ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! இவரின் கடனுக்கு நான் பொறுப்பு!” என்று கூறியதும் அவருக்கு நபி ஸல் அவர்கள் தொழுகை நடத்தினார்கள். நூல்: புஹாரி 2295
 
இன்று வியாபாரம், முதலீடு, கடன் பெறுதல் என்ற பெயரில் தேவைகள் அடிப்படைத் தேவைகளுக்காக அன்றி ஆசைகள் பேராசைகளுக்காக பகற்கொள்ளைகள் இடம் பெறுகின்றன, வியாபாரம் முதலீடு என பலர் ஏமாற்றப்படுகிறார்கள், வியாபாரத்தில் காசோலை மோசடிகள் சர்வ சாதாரணமாக இடம் பெறுகின்றன, கடனை ஊக்குவிக்கும் கடனட்டை மோசடிகளும் அதிகரித்துள்ளன, கடன் சுமை தலையில் இருக்க ஆடம்பர வாழ்க்கை நடாத்துவோர் வருடம் தவறாமல் ஹஜ் உம்ராவும் செய்யத் தவறுவதில்லை.
 
கடன் பற்றிய இந்தப் தொகுப்பை ஒரு சதகதுல் ஜாரியாவாக பதிவு செய்துள்ளேன்.
 எம்மையும் எமது பெற்றார் உடன்பிறப்புக்கள், மனைவி மக்கள், அன்பிற்குரியோர், ஆசான்கள் அனைவரையும் உங்கள் ஆத்மார்த்தமான துஆக்களில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
 
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
✍🏻 30.05.2021

“மஃவிததைன்” அபயம் தருகின்ற அந்த இரு அத்தியாயங்கள்…!

பாகுபாடில்லாமல் படைப்பினங்கள்
அனைத்தின் மீதும் கருணை புரியும் ரஹ்மான்
படைத்தவனை அறிந்து பணிவோர் மீது
பன்மடங்கு பாசம் கொள்ளும் ரஹீம்
அல்லாஹ்வின் உயர்திரு நாமத்தால்..
o
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்!
குல், நபியே நீ சொல்வீராக!
விடியலின் இரக்ஷகனிடம் யான்
அபயம் தேடுகிறேன்..!
அஊது பிரப்பில் பஃலக்!
o
அவன் படைத்தவை அனைத்தினதும்
தீங்குகள் தனிலிருந்தும் ..
மின் ஷர்ரி மா க்ஹலக்!
o
இரவு கவிழ்ந்ததன் பின்
ஊடுருவும் தீய சக்திகளிடமிருந்தும்..
வரின் ஷர்ரி காஸிகின் இதா வக்ப்..!
o
முடிச்சுகளின் மீது ஊதுகின்ற
மந்திரிக்கும் மாதர்தம் தீங்குகளிலிருந்தும்,
வமின் ஷர்ரின் நஃப்பாதாதி பில்உகத்..!
o
பொறாமைக் காரர் கொள்ளும்
பொறாமைகளின் தீங்குகளிலிருந்தும்..
வமின் ஷர்ரி ஹாஸிதின் இதா ஹஸத்!
o
படைப்பினங்கள் அனைத்தின் மீதும்
பாகுபாடின்றி கருணை புரியும் ரஹ்மான்
படைத்தவனை அறிந்து பணிவோர் மீது
பன்மடங்கு பாசம் கொள்ளும் ரஹீம்
அல்லாஹ்வின் திரு நாமத்தால்..
o
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்!
குல், நபியே நீ சொல்வீராக !
மானிடரின் இரக்ஷகனின்
அபயம் நான் தேடுகிறேன்!
o
மனுக்குலத்தின் மாமன்னரவன்!
மானிடர் போற்றி வணங்கப்படுபவன்!
மலிகின்னாஸி இலாஹின்னாஸ்!
o
உள்ளங்களை ஊடறுத்து
ஊசலாட்டம் புரிகின்ற
வஸ்வாஸின் (ஷைத்தானின்)
தீமைகள் போக்க..
மின் ஷர்ரில் வஸ்வாஸில் க்கன்னாஸ்!
o
மனிதர் மனங்களிலே ஊடறுத்து
வஸ்வாஸை (குழப்பங்களை) உண்டாக்கும்
மனிதர்கள் ஜின்கள் தம் தீமைகள் போக்க!
“மஃவிததைன்”
அபயம் தருகின்ற இரு
அத்தியாயங்கள் அவையென்று
அன்பின் தூதர் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் ..
அழைத்த இரு ஸூராக்கள்!
ஸூரதுல் பஃலக் மற்றும்
ஸூரதுன் நாஸ்!
o
நித்திரைக்குச் செல்லுமுன்
ஸுரதுல் பாதிஹாவுடன்
குல் ஸூராக்கள் மூன்றையும்
நித்தமும் ஓதித் தம்
பொற் கரங்களில் ஊதியபின்
தலைமுதல் பாதம் வரை
தடவிக் கொள்தல் எம்
தலைவர் (ஸல்) வழிமுறையாம்
ஸஹாபாக்கள் சொன்னார்கள்!
o
வலியொன்று கண்டாலும்
அவ்வாறே செய்தார்கள் நபியவர்கள்
அன்னை ஆயிஷா (ரழி)
அறிவிப்புச் செய்தார்கள்!
o
மனு ஜின் வர்க்கங்கள்
படைத்தாளும் இரக்ஷகனே
வணக்கத்திற்கு பாத்திரமான நாயகனே
பாதுகாவல் தேடுகிறோம், உன்னிடமே!
படைப்பினங்கள் அத்தனையும்
படைத்தவன் உன் பிடியில் தானே,
ரப்பே ரஹ்மானே!
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
04.11.2021

அரபிகளின் இராச்சியத்தில் பூச்சியத்தில் நகரும் வாழ்க்கை!

Man with Dromedary Camels (camelus dromedaris) in desert
உயர்தரம் கற்ற பின்னும்
உருப்படியாய் தொழிலின்றி
உழைப்பதற்காய் சென்றேன்
நானும் கடல் கடந்து!

o

சென்ற கடன் தீர்த்திடவும் வீட்டுச்
செலவினங்கள் பார்த்திடவும்
சென்றன முதலிரண்டு வருடங்கள்..

o

முதலோடு ஊர் வந்து
முறையாக தொழில் செய்ய
முயற்சிகள் செய்திடவே
கழிந்தனபின் நான்கு வருடங்கள்..!

o

விடுதலை இனியென்று
வீடுவர காத்திருந்தேன்
தங்கைக்கு வரனொன்று
வந்திருக்கும் செய்திகண்டு
தாமதித்தேன்…

o

தங்கையைக் கரைசேர்க்க
தங்கத்தை வாங்கிச் சென்றேன்…
தம்பியும் ஓடி வந்து
பல்கழைக் கழகம்
படிப்பு என்றான்…!

o

முப்பது வயது தானே
இன்னுமிரு வருடங்கள்
உழைத்திடவே புறப்பட்டேன்
மூன்றாம் முறையும் அங்கு!

o

தங்கையின் சீதனமும்
சீர்வரிசை செலவுகளும்
தம்பியவன் கற்கைகளும்
டியூஷன் பீஸ்களென
பட்ட கடன் தோள்களிலே
சுகமான சுமைகளாக
தாங்கி நான் கழித்திட்டேன்
கடல் கடந்த வாழ்வுதனை!

o

உற்றார் பெற்றார் ஹாஜத்தும்
தம்பிக்கு ஐ போனும்
தங்கைக்கு ஐ பேட்டும்
மச்சான் கார்வாங்க
வீட்டார் பட்ட கடன்
கடந்தன பல வருடங்கள்
பாலைவன தேசத்தில்…!

o

முப்பத்தி எட்டு வயதெனக்கு
வரன் ஒன்று வந்திருக்காம்
விடுமுறையில் சென்றவுடன்
வீடு வந்து பார்ப்பாங்கலாம்!

o

பண்ணிரண்டு வருடங்கள்
கடல்கடந்து உழைத்த எந்தன்
கையிருப்பில் காசுமில்லை
கல்யாணம் தான் பாக்கியென்று
உறுத்தியது உள்மனசு.!

o

ஊர் உலகம் பார்க்கவென
திருமணமும் நடந்தேற
மறுபடியும் தயாரானேன்
எமக்கென்று வாழ்வமைக்க…!

o

வாழ்க்கைப் பட்டவளும்
வாசல்வரை வந்தென்னை
வழியனுப்பி வருடங்கள்
இரண்டாச்சி…
கையில் ஒரு பிள்ளையுடன்
‘கப்பலுக்கு போன மச்சான்
கல்புக்குள் ஆளும் மச்சான்
எப்பதான் வருவீங்களோ’
என வரவுக்காய் காத்திருந்தாள்…

o

தங்கைக்கொரு வாழ்வு தந்தேன்…
தம்பிக்கொரு வழி சொன்னேன்…
கைகொடுக்க யாருமின்றி
கடன் சுமைகள் தாங்கி நின்றேன்…

நாடு திரும்பி வாழ்வதற்கு
வீடு ஒன்று வேண்டுமென
நாற்பது வயது தாண்டி
நான்கு வருடங்கள் கழிந்த பின்னும்
தொடர்கிறது என் வாழ்க்கை
பாலைவன தேசத்தில்…

o

ஆயிரங்கள் மட்டுமல்ல
வாழ்க்கையென்றால்
ஆயிரம் இருக்கும் என்பர்,
ஆனாலும் அடியேனின்
வாழ்க்கை மட்டும்
அரபிகள் இராச்சியத்தில்
பூச்சியத்தில் நகர்வதேனோ!

o

விடுமுறைகள் ஒவ்வொன்றும்
தேன் நிலவாய் முதலிரவாய்
கழிந்த பலன் கையிலின்று
மூன்று பிள்ளைகள்…!

o

விடுமுறைக் கணவராய்
விடுமுறைத் தகப்பனாய்
வீடுவரும் விருந்தாளி நான்!

o

இனியெந்தன் பிள்ளைகள்
கல்வி உயர் கல்வியென்றும்
கல்யாணம் காய்ச்சியென்றும்
கடைசிவரை கடல்கடந்தே
காலத்தை ஓட்டும் நிலை!

o

அரை வயிறும் குறை வயிறும்
அல்சரும் கேஸ்றைறிடிசும்
சுகரென்றும் பிரஷரென்றும்
சொல்லொனா வலிகளென்றும்
உள்ளுக்குள் புதைத்து நான்
உழைத்து களைத்திங்கு
நடைப் பிணமாய் நிற்கின்றேன்!

o

காலம் கடந்தபின் ஞானம்
பிறந்தின்று சொல்லுகிறேன்
உமக்குமொரு வாழ்வுண்டு
உன் மனைவி மக்களுக்கும்
என்பதனை நீர் மறவாதீர்!

o

தம்பிகளே தங்கைகளே,
அடிப்படைத் தேவைகள்
ஆசைகள் பேராசைகள்
பிரித்தறிந்து வாழ்வுதனை
திட்டமிட்டு கொண்டு செல்வீர்..!

o

விடுகதையா இந்த வாழ்க்கை,
தொடர்கதையா!

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
10.11.2021

(சொல்லக் கேட்ட சோகங்கள்)

முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்களுக்கு இறைதூதர் (ஸல்) அவர்களது அன்புக் கட்டளை!

முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்களை யமன் பிரதேசத்திற்கு அதிகாரியாக நியமித்து இறைதூதர் (ஸல்) அவர்கள் வழியனுப்பி வைக்கிறார்கள்; முஆத் இப்னு ஜபல் ஒட்டகையில் ஏறி புறப்பட இறைதூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் நடையாக சிறிது தூரம் அவருடன் செல்லுகிறார்கள்.

முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்களுடைய கரங்களை பற்றிக் கொண்டு முஆதே அல்லாஹ்விற்காக நான் உம்மை நேசிக்கிறேன் என்று மூன்று முறை கூறிவிட்டு நீர் ஒவ்வொரு தொழுகைக்கு பின்னரும் இவ்வாறு பிரார்த்தித்துக் கொள்வீராக என்று உபதேசம் செய்தார்கள்: “யா அல்லாஹ், சதாவும் உன்னை திக்ரு செய்யவும், உனக்கு நன்றி சொல்லவும், மிகவும் சிறப்பாக வணங்கி வழிபடவும் எனக்கு துணை புரிவாயாக!”

முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்கள் தனது 18 ஆவது வயதில் இறைதூதர் ஸல் அவர்களை சந்தித்து பைஅத் செய்து இஸ்லாத்தை தழுவிய இளம் தொழில் முனைவராக இருந்துள்ளார்கள், அழகும் அறிவும் நற்பண்புகள் நிறைந்தவராகவும் அல்குர்ஆன் ஸுன்னாஹ்வை தீவிரமாக கற்பதில் கற்பிப்பதில் அதிக ஆர்வமும் கொண்டவராக இருந்தார்கள்.  .

சன்மார்க்க விடயங்களில் தெளிவுபெற இவர்களை அணுகுங்கள் என இறைதூதர் ஸல் குறிப்பிடும் ஸஹாபாக்களில் அவர்களும் ஒருவர்; மக்கா வெற்றியின் பின்னர் தன்னுடன் இருந்து மக்காவாசிகளுக்கு மார்க்கத்தை போதிக்குமாறு இறைதூதர் ஸல் அவர்களை வேண்டிக் கொள்கிறார்கள், மறுமை நாளில் அறிஞர்களுடன் முஆத் சுவனம் செல்வார் என இறைதூதர் ஸல் அவர்களை பாராட்டுமளவு மார்க்கஞானம் உடையவராக திகழ்ந்தார்கள்.

உழைப்பில் சிறந்தவராக இருப்பது போல் இல்லாதோருக்கு இரங்கி இருப்பவற்றை தானதர்மம் செய்து விடும் இளகிய மனம் கொண்டவராக இருந்தார்கள், யமன் தேசத்திற்கு அதிகாரியாக அனுப்பப்பட முன்னர் அவர் பலரிடம் கடன் பட்டிருந்ததால், அவரையும் கடன்கொடுத்தவர்களையும் அழைத்து பேசியிருக்கிறார்கள் இறைதூதர் ஸல் அவர்கள்.

எவருமே கடனை விட்டுக் கொடுக்க முன்வராமையால் முஆத் ரழி அவர்களிடமிருந்த சில சொத்துக்களை விற்று அவற்றை செலுத்திவிட உதவி செய்திருக்கிறார்கள், யமன் தேசத்தில் சிறப்பாக வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள்.

மக்கள் பிரதிநிதிகள் அதிகாரிகள் தமது ஹலாலான உழைப்பில் கொடுக்கல் வாங்கலில் எவ்வளவு தூய்மையாக பொறுப்புடையவர்களாக இருக்க வேண்டும் என்பதனை இந்த சம்பவங்கள் உணர்த்துகின்றன.

இறைதூதர் ஸல் அவர்கள் யமன் தேசத்திற்கு வழியனுப்பும் பொழுது மற்றுமொரு விடயத்தை முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்களிடம் கூறவே அவர்கள் அழுது விடுகிறார்கள்; முஆதே, இன்றுதான் நீங்கள் என்னை இறுதியாக காண்கிறீர்கள் என நினைக்கிறேன், நீங்கள் திரும்பி வரும் பொழுது அல்லாஹ்விடம் நான் மீண்டிருக்க கூடும் என்றார்கள், அழவேண்டாம், ஷைத்தான் உங்களை அழச் செய்கிறான் என்று கூறிவிட்டுத் தான் அந்த துஆவை கற்றுக் கொடுக்கிறார்கள்.

சிறந்த துணிவுள்ள இளம் படை வீரராகவும் அவர்கள் திகழ்ந்தார்கள், பத்ரு யுத்தம் முதற்கொண்டு இறைதூதர் ஸல் அவர்களது அனைத்து படையணிகளிலும் பங்குபற்றி இருக்கின்றார்கள்.

இறைதூதர் ஸல் அவர்களது வபாத்திற்கு பின்னர் உமர் (ரழி) அவர்களது ஆட்சிக்காலத்தில் பைதுல் மக்திஸ் வெற்றி கொள்ளப்பட்ட படையணியில் கலீபாவின் தலைமையில் கலந்து கொள்கிறார்கள், பின்னர் கல்விப்பணி வர்த்தகம் என்பவற்றிற்காக அங்கு சில காலம் தங்க நேரிடுகிறது, ஷாம் தேச கவர்னர் அபூ உபைதா (ரழி) அவர்களோடு இருந்து விடுகிறார்கள்.

ஆனால் அந்த வருடம் தான் அம்வாஸ் எனும் கொள்ளை நோய் அங்கு பரவுகிறது, “நோயிருக்கும் இடத்தில் இருந்து வெளியேறவோ இருக்கின்ற இடத்திற்கு செல்லவோ கூடாது” என்ற இறைதூதர் (ஸல்) அவர்களது கட்டளையை மீறக் கூடாது என்ற பிடிவாதத்தில் ஆளுனர் அபூ உபைதாவும் ஏனைய நபித் தோழர்களும் அங்கேயே இருந்து விட்டார்கள்.

அபூ உபைதா ரழி அவர்கள் ஷஹீதாக முஆத் இப்னு ஜபல் ரழி அவர்கள் பதவியில் அமர்த்தப்படுகிறார்கள், என்றாலும் அவர்களும் கொள்ளை நோயிற்கு ஆளாகி தனது 33 ஆம் வயதில் ஹிஜ்ரி 18 ஆம் ஆண்டு ஷஹீதாகுகின்றார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

18 வயது முதல் 33 வயது வரை ஒரு இளம் நபித் தோழரது வாழ்வு எவ்வாறு இருந்திருக்கிறது, சற்று நிதானமாக இவ்வாறான சரிதைகளை படித்து எம்மை ஒருமுறை நாம் சுயவிசாரணை செய்து கொள்வோம்.

உங்கள் துஆக்களில் என்னையும் பெற்றார், உன்பிறப்புக்கள் மனைவி மக்களையும் ஆசான்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் அன்பின்

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

✍🏻 08.11.2021

 

 

 

 

அக்டோபர் 30 வடமாகாண முஸ்லிம்களது வெளியேற்றத்திற்கு 31 ஆண்டுகள்!

1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒட்டுமொத்த வடபுல முஸ்லிம்களையும் தமது அனைத்து உடமைகளையும் கைவிட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேறுமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தரவிட்டமை ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் நினைவு கூறப்படுகிறது.

புத்தளம் கம்பஹா கொழும்பு களுத்துறை அநுராதபுரம் உற்பட தென்னிலங்கையின் பலபாகங்களிலும் அகதிகளாக தஞ்சமடைந்த அவர்களது வாழ்வு மூன்று தசாப்தங்கள் கடந்த பின்னரும் முற்றுப் பெறாத சோகமாகவே இருக்கின்றது.

வடமாகாணத்தில் அவர்களிடமிருந்து பாசிசப் பயங்கரவாதிகளால் பறிக்கப்பட்ட அசையும் அசையா சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்ட வதிவிடங்கள் காணிகள் என்பவற்றிற்குப் புறம்பாக இரானுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்கள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வனப்பிரதேசங்களாக பிரகடணப்படுத்த பூர்வீக வாழ்விடங்கள் என இருதலைக் கொல்லி எரும்பின் நிலையில் அவலங்கள் தொடருகின்றன.

பலவந்தமாக வெளியேற்றப்பட்ட 75 000 மக்களது இயல்பான மூன்று தசாப்த சனத்தொகை வளர்ச்சி வீதத்துடன்இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களது எதிர்காலம் இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுற்ற உடனேயே சர்வதேச சமூகத்தின் அழுத்தம் மற்றும் கண்காணிப்பின் பேரில் அவசர அவசரமாக இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு புனரமைப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்ட பொழுதும் வடபுல முஸ்லிம்களது விவகாரம் (பழைய அகதிகள் இடம்பெயர்ந்தவர்கள் என) கிடப்பிலேயே போடப்பட்டமை கசப்பான உண்மையாகும்.

வடபுல முஸ்லிம்களது புர்வீக வாழ்விடங்களுக்கு மீளச்சென்று குடியேறுவதற்கான அடிப்படை உற்கட்டமைப்பு வசதிகள் எதுவுமே இல்லாத நிலையில் புதியதலைமுறைகள் அங்கு சென்று குடியைறுவதில் நம்பிக்கை இழந்து காணப்படுகிறார்கள்.

தாம் எதிர்கொள்ளும் இன்னொரன்ன சவால்களுக்கு மத்தியில் தமது அடிப்படை ஜனநாயக உரிமையான வாக்குரிமையை கூட தமது வாழ்விடங்களில் முறையாக பதிவு செய்வதிலும் அவற்றை பிரயோகிப்பதிலும் ஆயிரத்து எட்டு பிரச்சினைகள் இருக்கின்றன.

வடமாகாண முஸ்லிம்களது விவகாரம் மத்திய தேசிய அரசுகளின் நிகழ்ச்சி நிரல்களில் முறையாக உள்வாங்கப் படாமை பற்றி பேசும் பலர் அது வடமாகாண அரசியலின் நிகழ்ச்சி நிரலில் தமிழ்த் தலைமைகளாலும் உள்வாங்க மறுக்கப்படுகின்றமை குறித்து எவரும் அதிகம் பேசுவதாக தெரியவில்லை.

தமிழ் தேசிய வரலாற்றில் இழைக்கப்பட்ட மாபெரிய அநீதியை வரலாற்றுத் தவறை ஒத்துக் கொள்கின்ற அரசியல் தலைமைகள் மாகாண மட்டத்திலும் தேசிய அரங்கிலும் சர்வதேச அரங்கிலும் தமது நிகழ்சி நிரலில் வடபுல முஸ்லிம்களுக்கு நீதி வழங்குகின்ற நியாயத்தை பெற்றுக் கொடுக்கின்ற சமிகஞைகளையாவது காட்டவில்லை என்பது தான் உண்மை.

தமது சுயநிர்ணயத்திற்கான போராட்டம் தடம்புரண்டு போனமைக்குப் பின்னால் இருந்த மிகப்பிரதானமான காரணம் முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்ய பாசிசப் புலிகளும் ஆயுதக் குழுக்களும் மேற்கொண்ட முஸ்தீபுகள் தான் என்பதனை வரலாற்றை மீட்டிப் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.

இதுவரையும் சமுகமான அரசியல் தீர்வை எய்த முடியாது சர்வதேச பிராந்திய வல்லரசுகளின் நலன்களிற்கான பணயமாக தமது போராட்டத்தை அடகு வைத்து அங்கலாய்க்கும் தமிழ்த் தலைமைகள் வடகிழக்கில் சகோதர முஸ்லிம் சமூகத்தின் தனித்துவ அரசியல் அடையாளத்தை அங்கீகரித்து அரவணைக்கத் தவறின் இன்னும் பல தசாப்தங்கள் கடப்பினும் தீர்வுகளை எய்த முடியாது போகும்.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் மேலாதிக்கம் செலுத்த விரும்புகின்ற சர்வதேச பிராந்திய வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரல்களுக்குள் அகப்பட்டு முஸ்லிம் விரோத அரசியல் செய்கின்ற சக்திகளுக்கு வடகிழக்கில் காவிக் காவடி சுமக்க தயாராகும் சக்திகள் விலைபேசி சூதாட்டம் நடாத்துவது தமது சுயநிர்ணயத்திற்கான போராட்டத்தையே என்பதனை மறந்து விடக் கூடாது.

வடகிழக்கில் தமிழ் முஸ்லிம் சமூகங்களது தனித்துவமான அபிலாஷைகளை மனக்குறைகளை அங்கீகரிக்க மறுக்கின்ற, அவர்களைப் பிரித்து ஆள நினைக்கின்ற தென்னிலங்கை அதற்கான விலையை தற்பொழுது செலுத்திக் கொண்டிருக்கிறது.

இனியும் காலம் தாழ்த்தாது இரண்டு பெரும்பான்மைச் சமூகங்களும் இரண்டாவது சிறுபான்மைச் சமூகமான முஸ்லிம்களின் இருப்பை பாதுகாப்பு அடிப்படை உரிமைகளை சமயகலாசார தனித்துவங்களை ஐனநாயக உரிமைகளை மதித்து தீர்வுகளைக் காண முன்வருதல் வேண்டும்.

அதேவேளை மூன்று தசாப்த கால முஸ்லிம் அரசியல் தமது தனித்துவ அடையாள அரசியல் இலக்குகளை தொலைத்து விட்டு உரிமைகளுக்கான போராட்ட அரசியலை சலுகைகளுக்காக சோரம் போகும் சூதாட்ட சரணாகதி அரசியலாக மாற்றிக் கொண்டைமை எமது பின்னடைவுகளுக்கும் நாம் இன்று எதிர் கொள்ளும் சவால்களுக்கும் காரணமாகும் என்பதனையும் நாம் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

30.10.2021

 

படைத்த றப்புடன் நாம் உளப்பூர்வமாக செய்து கொள்ளும் உன்னதமான உடன்பாடு.!

பிறவியின் பயனை உணர்த்தி நிற்கும் பிரதானமான உறுதிமொழி.

வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் உயிரிலும் மேலான எமது தலைவர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள்.

நீர் அல்லாஹ்வின் முன்னிலையில் அவனை பார்த்துக் கொண்டிருப்பது போல் (உளப்பூர்வமாக எண்ணி) வணங்குவீராக, நீர் பார்க்கா விடினும் அவன் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறான் (என நினைவில் கொள்வீர்).

எத்தகைய வல்லமை மிக்க ஏகனாகிய அல்லாஹ்வின் முன் நாம் எத்தகைய பிரகஞையோடு ஆஜராகின்றோம்; அவன் எங்களை பார்த்துக் கொண்டிருக்கிறான், அல்லது நாம் அவனை பார்த்துக் கொண்டிருக்கும் அருகாமையும் சந்நிதானமும் எத்தகையவை, உயிரோட்டமானவை, எமது ஈமானிய பலத்தை அதிகரிப்பவை என்பதனை உணர்த்த எமது தலைவர் எமக்கு எதனை கற்றுத் தந்துள்ளார்கள்.

வாணங்கள் பூமியின் சூரியன் சந்திரனின் இரக்ஷகனை கண்டறிந்த இப்ராஹீம் (அலை) செய்து கொண்ட பிரகடனம் அது, நாம் மில்லத் இப்ராஹீமை சேர்ந்த நல்லடியார்கள்.

இந்தப் பிரமாண்டமான பிரபஞ்சத்தை,கோல் மண்டலங்களை, கிரகங்களை, நக்ஷத்திரங்களை, சூரிய குடும்பத்தை, மண்ணை, வின்னை , வளிமண்டலத்தை, சமுத்திரங்களை, மலைகளை, காடுகளை, உயிரினங்களை என அத்தனையையும் படைத்துப் பரிபாலித்து இயக்கிக் கொண்டிருக்கும் எல்லாம் வல்ல ஏகனாகிய இறைவனே உன் பக்கம் என் கவனத்தை முழுமையாக குவித்துள்ளேன்.

வஜ்ஜஹ்து :

“வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன் பக்கம் என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்; நான் இணைவைப்போரில் ஒருவனாக இருக்க மாட்டேன்.

என் தொழுகையும் என் தியாகமும் என் வாழ்வும் என் மரணமும் அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ்வுக்கே உரியன, அவனுக்கு இணையே இல்லை.

இவ்வாறே எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. நான் பூரணமாக கட்டுப்பட்ட (முஸ்லிம்) களில் ஒருவன் ஆவேன்.

(மேலதிகமான பகுதி)

இறைவா! நீயே அரசன், உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை; நீயே என் இறைவன், நான் உன் அடிமை, எனக்கு நானே அநீதி இழைத்துக் கொண்டேன், நான் என் பாவங்களை (மறைக்காமல்) ஒப்புக் கொள்கிறேன்.

எனவே, எனபாவங்கள் அனைத்தையும மன்னிப்பாயாக! பாவங்களை மன்னிப்பவர் உன்னைத் தவிர வேறெவரும் இலர்.

நற்குணங்களுக்கு எனக்கு வழிகாட்டுவாயாக. நற்குணங்களுக்கு வழிகாட்டுபவர் உன்னைத் தவிர வேறெவரும் இலர்.

துர்குணங்களை என்னிலிருந்து அகற்றுவாயாக! துர்குணங்களை அகற்றுபவர் உன்னைத் தவிர வேறெவரும் இலர்.

இதோ வந்தேன், கட்டளையிடு (காத்திருக்கிறேன்), நன்மைகள் அனைத்தும் உன் கரங்களிலேய உள்ளன.

தீமைகள் உன்னைச் சார்ந்தவை அல்ல, உன்னால் தான் நான் நல்வாழ்வு பெற்றேன், உன்னிடமே நான் திரும்பி வரப்போகிறேன்.

நீ சுபிட்சமிக்கவன், உன்னதமானவன், நான் உன்னிடமே பாவமன்னிப்புக் கோருகிறேன்; பாவங்களிலிருந்து மீண்டு உன்னிடம் திரும்புகிறேன்.

குறிப்பு:உங்கள் உளப்பூர்வமான துஆக்களில் எங்கள் உம்மா வாப்பா (ரஹ்) உடன் பிறந்தோர் மனைவி மக்கள் கல்விக்கண் திறந்துவிட்ட ஆசான்கள் அனைவரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

 

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

31.10.2021