வாக்களிக்கும் பொழுது முதல் தெரிவிற்கு (அரபு இந்திய இலக்கம்) 1 என்றும் இரண்டாம் தெரிவிற்கு 2 என்றும் மூன்றாம் தெரிவு இருந்தால் 3 என்றும் இலக்கங்களால் வாக்களிக்க வேண்டும், முதல் தெரிவிற்கு 1 என்ற இலக்கம் அல்லது X புள்ளடி இருந்தாலும் செல்லுபடியாகும். ஆனால் இரண்டாம் மூன்றாம் தெரிவுகள் இலக்கங்களாக தெளிவாக குறிப்பிடப் பட வேண்டும்.
இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு 35 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்பதனை அறிந்து வைத்துள்ளோம், அவர்களில் எவராவது அளிக்கப் படுகிற மொத்த வாக்குகளில் 50% விகிதத்தினை தாண்டிவிட்டால் வெற்றி பெற்றவராக அறிவிக்கப் படுவார், அவ்வாறு இல்லாதவிடத்து இரண்டாவது சுற்று கணக்கெடுப்பு இடம் பெறும்.
இரண்டாவது சுற்று கணக்கெடுப்பின் பொழுது ஆகக் கூடிய வாக்குகளைப் பெற்ற முதலிருவர் (உதரணமாக அந்த முதலிருவரும் (கோட்டா சஜித் அல்லது சஜித் அனுர, அல்லது கோட்டா அனுர என வருவதாக வைத்துக் கொள்வோம்) தவிர்த்து ஏனைய 33 பேரும் போட்டியில் இருந்து நீக்கப் படுவர்.
பின்னர், போட்டியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு வாக்களித்தவர்கள் அளித்துள்ள இரண்டாவது மூன்றாவது வாக்குகள் முன்னிலையில் உள்ள இருவருக்கும் அளிக்கப்பட்டிருந்தால் அவை வெவ்வேறாக அவர்களது வாக்குகளுடன் சேர்க்கப்பட்டு அதிகூடிய வாக்குகள் பெற்றிருப்பவர் வெற்றிபெற்றவராக பிரகடனப் படுத்தப் படுவார்.
கீழே சொல்லப் படும் ஒருசில விடயங்களை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்:
- முதலாவது சுற்று கணக்கெடுப்பிலேயே நீங்கள் விரும்பும் பிரதான வேட்பாளர் வென்றுவிடவேண்டும் என்று கருதினால் அவருக்கு மட்டும் நீங்கள் புள்ளடியிட்டு வாக்களித்துவிட்டு வீடு திரும்புங்கள்.
- இவர் பிரதான வேட்பாளாராக முதலிரு இடங்களில் வரமாட்டார் ஆனால் அடுத்துவரும் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக அல்லது பலமான எதிர்க் கட்சியாக அவரது கூட்டணி வரும் என்று கருதினாலும் அவருக்கு முதலாவது வாக்கையும் நீங்கள் விரும்பும் பிரதான வேட்பாளருக்கு இரண்டாவது வாக்கையும் நீங்கள் வழங்க வேண்டும்.
- பிரதான வேட்பாளர்கள் தவிர்த்து வேறு எவருக்கும் 2 ஆவது 3 ஆவது வாக்குகளை அளித்தால் பயனில்லை. முதலிருவரில் ஒருவர் 50% மேல் எடுக்கா விட்டால், அவர்களுக்காகவே 2 ஆவத 3 ஆவது வாக்குகள் எண்ணப்படும்.
- இவர் பிரதான வேட்பாளர் அல்ல ஆனால் இரண்டாவது சுற்று கணக்கெடுப்பு இடம் பெறும் பட்சத்தில் ஜனாதிபதியின் வெற்றியைத் தீர்மானிப்பார் அல்லது அடுத்த பாராளுமன்றத்தில் பிரதான பத்திரமாக (தனியாளாக) இருப்பார் என நீங்கள் கருதினால் அவருக்கு முதலாவது வாக்கையும் அவரோ நீங்களோ விரும்பும் பிரதான வேட்பாளருக்கு இரண்டாவது வாக்கையும் நீங்கள் வழங்க வேண்டும்.
- பிரதான வேட்பாளராக முதலிரு இடங்களுக்கு வருவார்கள் என நீங்கள் கருதுவோருக்கு வாக்களித்து விட்டு ஏனைய உதிரி/பினாமி வேட்பாளர்களுக்கு இரண்டாவது மூன்றாவது வாக்குகளை வழங்குவதில் பயனில்லை ஏனெனில் அந்த வாக்குகள் இரண்டாவது சுற்றில் எண்ணப்படுவதில்ல்லை.
- பிரதான வேட்பாளர்கள் தவிர்த்து ஏனைய உதிரி/பினாமி வேட்பாளர்களுக்கு மட்டும் நீங்கள் வாக்கினை அளிப்பதில் பயனில்லை, வாக்களிக்காமல் இருந்து விடலாம்.
ஜனாதிபதித் தேர்தலில் கடமை தவறாது பொறுப்புணர்வோடு வாக்களிப்போம்.
இந்த வருடம் இடம் பெறும் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக எல்லா சமூகங்களாலும் பார்க்கப்படுகின்றது, தேசிய அரசியலில் மாத்திரமன்றி பிராந்திய சர்வதேச பூகோள அரசியல் முக்கியத்துவமும் அதற்கு இருக்கிறது.
அடுத்து அமையவிருக்கின்ற பாராளுமன்றம் மற்றும் புதிய அரசாங்கம் என்பவற்றிலும் இந்தத் தேர்தல் கணிசமான பதிப்பை தாக்கத்தை கொண்டிருக்கப் போகின்றது என்பதிலும் சந்தேகமில்லை.
குறிப்பாக இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் போருக்குப் பின்னரான இலங்கையில் எதிர்கொண்டு வரும் சவால்கள் அவற்றின் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் மிகவும் கசப்பான அனுபவங்கள், படிப்பினைகள், நம்பிக்கை ஈனங்களுக்கு மத்தியில் தான் நாம் இந்தத் தேர்தலை எதிர் கொண்டுள்ளோம்.
எந்தவொரு இக்கட்டான நிலையிலும் எமது இருப்பு பாதுகாப்பு மற்றும் ஏனைய உரிமைகளை ஜனநாயக வழிமுறைகளில் மாத்திரமே எம்மால் அடைந்து கொள்ள முடியும் எனற வகையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எமது வாக்குரிமையை தவறாது நாம் பிரயோக்கிக்க முன்வருதல் வேண்டும்.
குறிப்பாக பெண்கள் தமது ஆடைகள் குறித்த சர்ச்சைகளை தவிர்த்துக் கொள்வதற்காக வாக்களிக்காமல் இருந்து விடுவார்கள், அவர்கள் உரிய சன்மார்க்க ஆலோசனைகளை பெற்று தமது பெற்றார் சகோதரரர்கள் கணவன்மார் என பதுகாவலர்களோடு நேரகலத்தோடு வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்குகளை அளித்து விட வேண்டும்.
ஊருக்கு வெளியே பயணங்கள், வியாபாரங்கள், ஜமாத்துகள் என கிளம்பிவிடாது ஊரில் இருப்பதுவும் வெளியில் இருப்பவர்கள் விடுமுறைகளில் வீடுகளில் இருந்து வாக்குரிமையை பிரயோகிப்பதும் காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல், நீதியை நிலை நிறுத்துதல், நல்லாட்சியொன்று அமைய பங்களிப்பு செய்தல், உரியவர்களிடம் அதிகாரத்தை வழங்குதல், சாட்சியம் சொல்லுதல், அமானிதம் பேணுதல் என நாமறிந்த நல்ல விடயங்களை தேசிய அரசியல் வாழ்விலும் இயன்றவரை கடைப்பிடிப்பது கட்டாயம் என்ற வகையில் பார்வையாளர்களாக அன்றி பங்காளர்களாக நாமிருக்க வேண்டப்பட்டுள்ளோம்.
வாக்குச் சாவடிக்குள் நீங்கள் எடுக்கின்ற முடிவு ஊரிலும், நகரிலும், மாநகரிலும் மாத்திரமன்றி நாட்டிலும் எதிர்கால சந்ததிகள் வாழ்விலும் நல்லதையோ கெட்டதையோ விளைவிக்கப் போகிறது.
வாக்கு என்பது “சாட்சியமாகும்”,
வாக்கு என்பது “அதிகாரமளித்தலாகும்”
வாக்கு என்பது “தெரிவு” ஆகும்,
வாக்கு என்பது “ஆயுதமாகும்”,
வாக்கு என்பது “தீர்ப்பு” ஆகும்,
வாக்கு என்பது “ வகிபாகம்” ஆகும்,
வாக்கு என்பது “துணைபோதல்” ஆகும்,
வாக்கு என்பது “சோதனை” ஆகும்,
வாக்கு என்பது மொத்தத்தில் “அமானிதமாகும்”.
இந்த அமானிதம் குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவோம்.
எல்லோருக்கும் பொதுவான தேசிய வாழ்வில் சகல துறைகளிலும் நாம் போற்றுகின்ற உயரிய விழுமியங்களை கொள்கை கோட்பாடுகளை நியாய தர்மங்களை மேலோங்கச் செய்வது தஃவா மற்றும் ஜிஹாத் எனும் விதியாக்கப்பட்ட அறப்பணிகளாகும்.
அரசியல் ஆட்சி அதிகாரம் என்பன அக்கிரமக்கார்களிடமிருந்து மீட்கப்படுவதற்கான போராட்டம் வரலாறு நெடுகிலும் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமிடையிலான தொடர்ந்தேர்ச்சியான சமராக இடம் பெற்று வந்தள்ளதை நாம் நன்கு அறிவோம்.
சத்திய வழி நின்று அரசியல் எனும் மிகப்பெரிய அமானிதத்தை பேணிக்காப்பதில் வேட்பாளராயினும் வாக்காளராயினும் எமது வரலாற்றக் கடமையினைச் சரியாகச் செய்வோம்.
சரியான முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்க வேண்டும்; பிழைத்த பின் கைசேதப்பட்டு பயனில்லை.