இன்று ஸுபஹு தொழுதுவிட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளருக்கு அழைப்பை எடுத்தேன்:
நேற்று (04/02/2017) மாலை இடம் பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடக் கூட்டத்தின் போது கட்சியின் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் பதவியில் இருந்து ஏகமனதாக இடை நிறுத்தப்பட்டதனை கட்சி வட்டாரங்கள் ஊர்ஜிதப் படுத்தியுள்ளன.
இன்று ஸுபஹு தொழுதுவிட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளருக்கு அழைப்பை எடுத்தேன்; ஸலாம் கூறி பதில் சொல்லியபின் அவருடன் பேசி ஒரு வேண்டுகோளை விடுத்தேன்:
உங்கள் (கீழ் காணும்) கூற்று உண்மையாக இருந்தால் :
“கோயிலை இடித்தேன், கோயில் கூடாது என்பதற்காக அல்ல கோயில் கொடியவர்களின் கூடாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக ” என்ற சுய விளக்க உரை போல் நானும் மக்கள் நீதி மன்றத்தின் முன்னால் நின்று கொண்டு “மஸ்ஜித்திற்குள் கறையான்கள் கூடு கட்டியிருப்பதனால் மஸ்ஜித்தை இடிக்க முடியாது, கறையான்களின் கூடுகளை இடித்துக் கூட்டித் தள்ளி தூய்மைப் படுத்த இவ்வளவு காலமும் தவறிய மஹல்லாவாசிகளாகிய நாம் உடனடியாக கடமையைச் செய்யத் துணிய வேண்டும்” என்று அறை கூவல் விடுப்பேன்.”
உண்மையில் நீங்கள் கூறுவதுபோல் இதய சுத்தியுடன் மனம் வருந்தி கடந்த கால தவறுகளை உணர்ந்து அல்லாஹ்விடம் மீளுவதாக இருந்தால் உங்களிற்கும் ஹக்கீமிற்கும் இடைப்பட்ட தனிப்பட்ட உறவுகள் அல்லது ஹக்கீமினதும் தோழர்களினதும் அந்தரங்க ஒழுக்கம் மற்றும் ஊழல் மோசடி சார்ந்த விடயங்களை வெளிக் கொணர்வதாக இருந்தால்..
அதனைவிடவும் முக்கியத்துவமளித்து கடந்த காலங்களில் நீங்களும் பங்காளியாக அல்லது பார்வையாளராக இருந்து இந்த முஸ்லிம் சமுதாயத்திற்கு அரசியல் ரீதியாக இழைத்த மிகப் பெரிய தவறுகளை ஆவணப்படுத்தி வெளியிடுங்கள், குறிப்பாக தலைவர் அஷ்ரஃப் அவர்களின் மரணம் முதல் இன்றுவரை தீர்க்கமான அரசியல் நகர்வுகளை எடுக்கும் பொழுது மிகப் பெரும் வரலாற்றுத் தவறுகளை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இழைத்துள்ளது.
(உங்களுடன் பேசுவதற்கு எனக்கும் தயக்கமாக இருக்கிறது, நீங்கள் நிச்சயமாக பதிவு செய்வீர்கள், (சிரிக்கின்றார்) என்றாலும் கூற வேண்டியவர்களிடம் உண்மைகளைக் கூறுவதற்கு நான் தயங்கியதே இல்லை)
“தாருஸ்ஸலாம்” அமைந்துள்ள இடத்தை கொள்வனவு செய்வதற்காக 1990 ஆம் ஆண்டு நானே நிதியினைப் பெற்றுக் கொடுத்தேன், அப்பொழுது கட்சியில் எங்களுக்கு தேனீர் குடிக்கவும் காசு இருக்க வில்லை, பின்னர் ஹாபிஸ் நசீர் அஹமதின் பிடியில் இருந்து அதனை மீட்டெடுப்பதற்காக 2010 ஆம் ஆண்டு நானே ஹக்கீமுடன் சமரசம் செய்து வைத்தேன் அதற்கான விலை கொடுக்கப்பட்டுள்ளது, தலைவர் அஷ்ரஃபின் மரணம் முதல் இன்றுவரை அதிலிருந்து பெறப்பட்ட வருவாயில் ஒரு புலமைப் பரிசில் தானும் வழங்கப் படவில்லை.
“முஸ்லிம் காங்கிரஸ்” எனும் மக்கள் பேரியக்கம் எங்கள் தோள்களில் சுமத்தப்பட்ட மிகப் பெரிய அமானிதமாகும், முஸ்லிம் சமூகம் தனது அரசியல் இருப்பு குறித்த பெரும் நம்பிக்கையை அதில் வைத்திருக்கிறது, தனிமனிதர்களின் விருப்பு வெறுப்புகள், ஆசாபாசங்கள், இச்சைகள், நடத்தைகள், ஊழல் மோசடிகளுக்கு அப்பால் இந்த சமூகத்தின் அரசியல் அமானிதம் எவ்வாறு பாழ் படுத்தப்பட்டது, படுகின்றது படப் போகின்றது என்ற விடயங்களை நீங்கள் வெளிக் கொணர்வதன் மூலமே நீங்கள் சமூகத்திற்கும் அதனூடாக அல்லாஹ்விற்கும் விசுவாசமாக நடந்து கொள்ள முடியும்.
அவ்வாறு செய்தால் மாத்திரமே, நாளை அல்லாஹ்வும் மக்களும் உங்களை பொருந்திக் கொள்வார்கள். என்றேன்:
இன்ஷா அல்லாஹ், அதனையும் நான் செய்து கொண்டிருக்கின்றேன் மக்கள் மன்றத்தின் முன் வைப்பேன் என்று அவர் கூறினார்.
முஸ்லிம் காங்கிரஸின் ஒழுக்கக் கோவை
SLMC ஒழுக்கக் கோவையை 1989 இல் நான் (இனாமுல்லாஹ்) வரைந்தேன், தலைவர் அஷ்ரபின் அவதானங்களுடன் ஸ்தாபக தவிசாளர் சட்டத்தரணி சேகு இஸ்ஸதீன் அதில் ஒரு சில சட்ட நுணுக்கங்களுடன் கூடிய மாற்றங்களை செய்தார்.
