Sunday, April 19, 2026

புனிதமிகு ரமழான் மாதமும் இப்தார் ஏற்பாடுகளும்!

இன்ஷா அல்லாஹ், இன்னும் இரு வாரங்களில் நாம் புனித ரமழான் மாதத்தை அடைந்து கொள்கின்றோம்.
 
புனித ரமழானை ஹயாத்தாக்குதல் என்ற பெயரில் மஸ்ஜித் நிர்வாகங்கள் செய்கின்ற வழமையான ஏற்பாடுகளிற்கு அப்பால் இயன்றவரை தற்போதைய கால சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஒரு சில விடயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
புனித ரமழான் மாதம் முழுவதும் ஆன்மீக பயிற்சியின் மாதம் என்ற வகையில் குறிப்பாக பதின்ம வயதினர் இளைஞர்களை மஸ்ஜிதுகளுடன் தொடர்பு படுத்துகின்ற காத்திரமான முன்னெடுப்புகளைச் செய்தல் வேண்டும்.
 
அதேபோன்று மாதர்களை மையப்படுத்திய நிகழ்வுகளை தாய்மார்கள் மாத்திரமன்றி பருவ வயதில் இருக்கும் சகோதரிகளையும் உள்வாங்கிய அல்குர்ஆன் ஹதீஸ் மற்றும் தர்பிய்யாஹ் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல் கட்டாயமாகும்.
 
ஒவ்வொரு முஸ்லிம் ஊரிலும் சகல தரப்புகளையும் உள்வாங்கிய இஸ்லாமிய தலைமைத்துவக் கட்டமைப்பான ஷுரா சபைகளை அமைத்து தத்தமது பிரதேசங்களில் எமது இருப்பு பாதுகாப்பு உற்பட ஏனைய சமூக முக்கியதாதுவம் வாய்ந்த விடயங்களை கலந்தாலோசித்து சமூக ஒழுங்கையும் கட்டுக் கோப்பையும் பேணுவோம்.
 
ஆன்மீக அகப் பயிற்சிகளில் அதிக கவனம் செலுத்துவதோடு பறக் கோலங்களில் புலக் காட்சிகளில் தராவீஹ், பிரபலங்களின் பயான், இப்தார் என்ற பெயரில் ஆரவாரங்களைக் குறைத்து அமைதியாக அடக்கமாக அர்தபுஷ்டியான அமல் இபாதத்களில் அதிக கரிசனை செலுத்துவோம்.
 
இப்தார் என்ற பெயரில் ஆங்காங்கே பாரிய செலவுகளுடன் இடம் பெறும் நூதனமான ஆரவாரமான விளம்பர இப்தார் வைபோகங்களை தவிர்த்து மஸ்ஜித் மைய செயற்பாடுகளில் கூடிய கரிசனை செலுத்துவோம்.
 
சமாதான சகவாழ்வு இப்தார்கள் என்ற பெயரில் எமது மஸ்ஜிதுகளில் மாற்று மதத்தினரும் அவர்களது வழிபாட்டுத் தளங்களில் நாங்களுமாக வரம்புகள் மீறி உண்டு களிக்கும் விழாக்களை, விஷேட வைபவங்களை முற்றாகவே தவிர்த்துக் கொள்வோம். (ஆளுக்கு ஆள் இயக்கத்திற்கு இயக்கம் கட்சியிற்கு கட்சி என எல்லோருமாக இந்த பித்அத்தான வைபவங்களில் வரம்பு மீறிக் கொண்டிருக்கிறோம்.)
 
விதவிதமான சிற்றுண்டிகள், மென்/ குளிர் பானங்கள், இராப்போசனம் என ஆண்களை அதிகம் மையப்படுத்திய ஆடம்பர இப்தார் வைபவங்களை தவிர்த்து சமூகத்தில் உள்ள ஏழை எளியவர்கள் சஹர் இப்தார் இரண்டையும் குடும்பமாக சிறப்பாக செய்து கொள்வதை உறுதிப்படுத்துவோம்.
 
நோன்பு கால பகல் இராப் பொழுதுகளை உயிர்பிப்பதாக பாமரத்தனமாக எண்ணிக் கொண்டு ஏட்டிக்குப் போடாடியாக உச்ச தொணியில் மஸ்ஜிதுகளில் ஒலிபெருக்கிகளை அலர விட்டு அழகு பார்த்து பெருமிதமடையும் மடமைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்போம்.
 
கொள்கைப் பிரச்சாரங்கள் என்ற பெயரில் பீரங்கிப் பேச்சாளர்களை அழைத்து வந்து சர்ச்சைக்குரிய விடயங்களை பேச வைத்து ஒலிபெருக்கிகளூடாக ஊர்களை அதிர வைத்து சர்சைகளைக் கிளப்பூம் ஜாஹிலிய்யத்திற்கு முடிவு காண்போம்.
 
ஊரில் உள்ள உலமாக்கள் கல்விமான்கள் புத்திஜீவிகளை அங்கீகரித்து கொளரவித்து அவர்களிடமிருந்து ஆரவாரங்களின்றி அமைதியாக கற்றுக் கொள்வோம்.
 
ஹலாலான வாழ்வாதாரம் சார் கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல்களை மஸ்ஜிதுகளிலும் ஒழுங்கு செய்து பதின்ம வயதினரை மற்றும் இளைஞர்களை மஸ்ஜித் மைய செயற்பாடுகளில் தர்பிய்யா தஸ்கியா நிகழ்வுகளில் பங்கு கொள்ள ஆர்வமூட்டுவோம், சன்மானங்கள் வழங்கி ஊக்குவிப்போம்.
 
ஏனைய சமூகங்கள் ரமழானையும், இஸ்லாத்தையும் முஸ்லிம்களை திட்டித் தீர்க்கும் இடைஞ்சல் தொந்தரவு செய்யும் சகல நடவடிக்கைகளிலும் இருந்து தவிர்ந்து சமுதாய கட்டுக்கோப்பை உச்ச அளவில் பேணுவோம்.
புனிதமிகு ரமழான் மாதமும் இப்தார் ஏற்பாடுகளும்!
ஸல்மானுல் பாரிஸி(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :  ஷஹ்பான் மாதத்தின் இறுதிநாளில் நபியவர்கள் எமக்கு மத்தியில் பின்வருமாறு உரையாற்றினார்கள், “மக்களே மகத்தான ஒரு மாதம் உங்களிடம் வந்திருக்கிறது. இது பறக்கத் பொருந்திய மாதம். ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஒரு இரவு இந்த மாதத்திலேயே காணப்படுகிறது. இதன் பகழ்ப் பொழுதுகளில் நோன்பு நோற்பது கடமையாகும். இரவுப் பொழுதுகளில் நின்று வணங்குவது சுன்னத்தாகும்.  இதில் எவர் நற்காரியத்தைச் செய்கிறாரோ அவர் ஏனைய நாட்களில் எழுபது கடமைகளை நிறைவேற்றியதைப் போலாகும். இது பொறுமையின் மாதம். பொறுமைக்குரிய கூலி சுவர்க்கமாகும். இது துயர் துடைக்கும் மாதம். இது ஒரு விசுவாசியினுடைய ரிஸ்க் அதிகரிக்கப்படும் மாதம்,  இந்த மாதத்தில் ஒருவருக்கு நோன்பு திறக்க உதவி செய்தால் அந்த செயல் அவருக்கான பாவ மன்னிப்பகவும் நரக விடுதலையாகவும் காணப்படும். இவருக்கும் நோன்பு நோற்றவரைப் போன்ற கூலி கிடைக்கும். அதேவேளை நோன்பாளியின் கூலியில் எந்தக் குறைவும் ஏற்படாது.”

அல்-குரான் அருளப்பட்ட புனிதமிகு ரமழான் மாதத்தில் மனிதர்களை புனிதர்களாக்குவதற்காகவே நோன்பு கடமையக்கப்பட்டிருக்கின்றது, நாம் பெறும் உயரிய ஆன்மீக, தார்மீக, பண்பாட்டு பெறுமானங்களின் வெளிப்பாடுகளாக பரோபகாரம்,தயாளகுணம், இல்லாதவர், இயலாதவர் மீதான கருணை, ஏழை எளியவர் மீதான கரிசனை போன்ற செயல் வடிவங்கள் காணப்படுகின்றன.

ஒருவரை நோன்பு துறக்கச் செய்பவருக்கு நோற்றவரின் நன்மையில் எதுவித குறைவுமில்லாமல் அதற்கீடான நன்மைகள் கிடைப்பதாக எங்கள் உயிரிலும் மேலான இறுதி இறைதூதர் முஹம்மத் (ஸல்) கூறியுள்ளதன் மூலம் சமூகத்தில் உள்ள ஏழை எளியவர்கள், நிர்க்கதியில் உள்ளவர்கள், வழிபோக்கர்கள் என தேவையுடைய அனைவர் மீதான சமூக அக்கறையையும் உம்மத்தின் மீது வலியுறுத்தியுள்ளார்கள்.

அந்த அடிப்படையில் அல்-குரானும் சுன்னஹ்வும் வலியுறுத்துகின்ற சமூககடப்பாடுகளின் அடிப்படை இலக்குகளை ஆழமாக மனதில் இருத்தியவாறே நாம் இப்தார் ஏற்பாடுகள் குறித்து சிந்திக்க வேண்டும்.

இப்தார் ஏற்பாடுகளை வெறுமனே மற்றுமொரு நூதனமான சடங்காகவோ,சம்பிரதாயமாகவோ, விஷேட விழாவாகவோ, ஆடம்பரமான கொண்டாட்டமாகவோ, தனிநபர், இயக்க ,வியாபார விளம்பரங்களாகவோ நாம் மேற்கொள்வோமாயின் நிச்சயமாக நல்லதே செய்வதாக எண்ணிக் கொண்டு மிகப்பெரும் தவறினையே நாம் இழைத்துக் கொண்டிருக்கின்றோம்.

ஏழை எளிய மக்கள், பசி ,பட்டினி, வறுமையில் உள்ளவர்கள் சஹர் செய்வதற்கே போதுமான உணவுப் பொருட்களை கொண்டிராத பொழுது வகை வகையான சிற்றுண்டிகளையும், வகையறாக்களையும், ஆடம்பரமான உணவுவகைகளையும் அளவுக்கதிகமாக கொண்ட இப்தார் ஏற்பாடுகளை செய்வதில் இருந்து அல்லது அவற்றை “இப்தாருஸ் ஸாயிம்” எனற அடையாளத்துடன் செய்வதில் இருந்து நாம் தவிர்ந்து கொள்ளல் வேண்டும்.

iftarநோன்பு திறப்பதற்கான ஏற்பாடுகளுடன் இஸ்லாமிய வழிகாட்டல் விழிப்புணர்வு மற்றும் சன்மார்க்க வரையறைகளை மீறாத  நிகழ்வுகள் அத்தோடு நோன்பு தரும் ஆன்மீக பண்பாட்டு ஒழுக்கவியல் மாண்புகளை அடுத்த சமூகங்களும் புரிந்து கொள்ளச் செய்கின்ற அனைத்து விதமான செயற்பாடுகளும் ஆகுமானவையே.

என்றாலும் நாம் வாழுகின்ற சூழல், கள நிலவரங்கள் என்பவற்றையும் அடுத்த சமூகங்களின் உணர்வுகளையும் கருத்தில் எடுத்து மிகவும் சமயோசிதமாகவும் சமுதாய மற்றும் மஹல்லாக்களின் கூட்டுப் பொறுப்போடும் உலமாக்கள், புத்திஜீவிகள் சமூக ஆவலர்களின் ஆலோசனைகளோடும் அவற்றை நாம் மேற்கொள்ள வேண்டும்.

நாம் வாழ்கின்ற சூழலில் புனித ரமழான் எமக்கு வழங்குகின்ற ஆன்மீக பண்பாட்டு பக்குவங்களின் பிரதிபலிப்புக்களான தாராளத் தன்மையும், தாள குணமும் பரோபகாரமும் அடுத்த சமூகங்களையும் அரவணைத்துச் செல்கின்ற அழகிய செயல் வடிவ முன்மாதிரிகள் விண்ணைப் பிளக்கும் ஒலிபெருக்கிப் பீரங்கிப் பிரசங்கங்களினை விடவும் ஆக்க பூர்வமான பிரதிபலன்களை கொண்டிருக்கும்.

இப்தார்  நிகழ்வுகளுக்கு அழைக்கப்படுவோர் அதான் சொல்லும் வரை வெளியில் நின்று அரட்டையடிப்பதும் அல்லது இறுதி நேரத்தில் வருகை தருவதும் எதிர்பார்க்கப்படுகின்ற அடைவுகளை தருவதில்லை எனபதனையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

அதான் சொன்னவுடன் குறுகிய நேரத்திற்குள் நோன்பை துறந்து விட்டு மஃரிபுத் தொழுகையை உரிய முறையில் எல்லோரும் நிறைவேற்றுவதனை அதற்காக அமைதியாக தயராவதனை நாம் உறுதி செய்து கொள்ளுதல் கட்டாயமாகும்.

மஸ்ஜிதுகளில் ஆண்களுக்கு மாத்திரம் தொடர்ந்து இப்தார் ஏற்பாடுகளை செய்வதும் பெண்களையும் குழந்தைகளையும் பெரியவர்களையும் மறந்து விடுவதும் முறையான இப்தார் ஏற்பாடுகளாக இருக்கவே மாட்டாது. அவர்களை மஸ்ஜிதுகளுக்கு அழைத்துவர முடியாத நிலை இருப்பதனால் அவற்றிற்கான மாற்றீட்டு ஏற்பாடுகள் குறித்து மஹல்லாக்கள் கவனம் செலுத்துதல் வேண்டும்.

Datesஇப்தாருக்காக கிடைக்கப்பெருகின்ற பேரீத்தம் பழங்கள் மற்றும் இன்னோரன்ன உலருணவுப் பொருட்களை மஸ்ஜிதுகளூடாகவே எல்லோருக்கும் கிடைக்கும் வண்ணம் வினியோகம் செய்தல் வேண்டும், இயக்கங்கள் அமைப்புக்கள் தமக்கு கிடைப்பவற்றையும் மஸ்ஜிதுகளூடாகவே வழங்குதல் வேண்டும், அவ்வாறு கிடைப்பவை பெரும்பாலும் ஏழை எளியவர்களுக்காக வக்பு செய்யப்பட்டவை என்பதானால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதனை மஸ்ஜிதுகள் வழக்கபப்டுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

இன்ஷா அல்லாஹ், இனிவரும் காலங்களில் இசலாமிய போதனைகளின் அடிப்படை இலக்குகளை மறந்து விடாது உரிய வரை முறைகள் பேணி எமது இப்தார் நிகழ்வுகளை நாம் அமைத்துக் கொள்ள முயற்சிப்போம், எமது குறை குற்றங்களை மன்னித்து அனைவரது உளத் தூய்மையான அனைத்து செயற்பாடுகளையும் எல்லாம் வல்ல அல்லாஹ் அங்கீகரித்து அருள்புரிவானாக!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles