# விரக்தியின் விளிம்பில் இருந்து…
பொதுசன அபிப்பிராயங்களில் தாக்கம் செலுத்த முடியுமான கருத்துருவாக்க முன்னோடிகளின் பற்றாக்குறை.
யுகத்தின் சவால்களுக்கு முகம் கொடுக்கின்ற முற்போக்கான சமூக, பொருளாதார, அரசியல், கல்வி, கலாசார, சுகாதார, சுற்றுச் சூழல் சிந்தனைகள் “பொதுசன அபிப்பிராயங்கள்” ஆக மக்களை சென்றடையாமைக்கான காரணங்கள் கண்டறியப் பட வேண்டும்.
இலங்கையை பொறுத்தவரை புத்திஜீவிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனைப் பள்ளிகள் காலத்திற்கு ஏற்ற பங்களிப்புக்களை காத்திரமாக செய்யத் தவருவதால் “கருத்துருவாக்க முன்னோடிகள்” என்போர் வெறும் கற்பனாவாத கனவுலகில் சஞ்சாரித்துக் கொண்டிருப்பதாகவே கொள்ள வேண்டி இருக்கின்றது.
சிலவேளைகளில் சர்வதேச பிராந்திய பூகோள மற்றும் மத்திய கிழக்கு அரசியலில் ஆர்வம் காட்டும் அளவிற்கு தேசிய அரசியலில் சிந்தனைப் பள்ளிகள் ஆர்வம் காட்டுவதில்லை, அதேபோன்று உள்நாட்டில் தேசிய அரசியலில் ஆர்வம் கொண்டுள்ள பலர் தமது மாவட்ட மாகாண உள்ளூர் அரசியல் சமூக பொருளாதார விவகாரங்களை ஆய்வு செய்யவும், மூலோபாய திட்டமிடல்களை வகுக்கவும் மறந்து விடுகின்றனர்.
எல்லாத் மட்டங்களிலும் பிழையான தரப்புக்களால் இடைவெளிகள் உடனுக்குடன் நிரப்பப் படுவதும் நாம் காலம் கடந்து கைசேதப் படுவதும் வழமையாகி போய்விட்டது.
சமூக மாற்றத்திற்காக உருவாக்கப் படுகின்ற இளம் தலைவர்கள் சிவில் சமூகத்தில் இரண்டறக் கலக்காமல் இருப்பதற்கான பல காரணங்கள் இருக்கின்றன, அரசியல், சமூக பொருளாதார காரணங்களுக்கு அப்பால் அவர்கள் பல பாசறைகளில் முடக்கப்பட்டு அவர்களது திறமைகளும் ஆற்றல்களும், தலைமைத்துவ பண்புகளும், ஒருசில புத்தக ஜீவிகளாலும், பிரபல பிம்பங்களாலும் மழுங்கடிக்கப் பட்டு வருகின்றன.
அரசியல் சமூக பொருளாதார தளங்களில் களங்களில் நவீன முற்போக்கு சிந்தனைத் தலைமைகள் இல்லாமைக்கு பின்னால் ஊடகங்களும் பாரிய பங்களிப்புக்களை செய்து வருகின்றன, பொதுசன அபிப்பிராயம் மற்றும் கருத்துருவாக்கம் போன்ற செயற்பாடுகளில் புத்திஜீவிகளுக்கும் பொது மக்களிற்கு இடையிலான இணைப்புப் பாலமாக ஊடகங்கள் உரிய வகையில் பங்களிப்புச் செய்யத் தவறி விடுகின்றன.
இலங்கையில் பல்வேறு துறைகளிலும் நிபுணர்கள் வளவாளர்கள் கல்விமான்கள் எல்லா மட்டங்களிலும், பிரதேசங்களிலும் இருக்கின்றார்கள்.
ஆனால் அவர்களுக்கு உரிய அங்கீகாரமும், சந்தர்ப்பங்களும் வழங்கப் படுவதில்லை, ஒரு சில பிரபல பிம்பங்களை உருவாக்குவதும் அவர்களை நம்பியிருப்பதும் இந்த சமூக அமைப்புகள் செய்யும் மிகப் பெரிய தவறாகும், இது எமது காரங்களாலேயே நாங்களே சிலைகள் செய்து வழிபடுவது போன்ற பாமரத்தனமாகும்.
இதனை ஹீரோ வெர்ஷிப் என ஆங்கிலத்தில் சொல்வார்கள், இது அநீதிகளில் பெரிய அநீதியாகும், அமானிதங்களை பாழ் படுத்துகிற பாவமாகும்.
பல வருடங்கள் பல்கலைக் கழகங்களில் ஜாமியாக்களில் கற்றவர்களை கூட வாழ்நாள் முழுவதும் மாணவர்களாகவே முடக்கி வைத்து ஒரு சில வாழ்நாள் வளவாளர்கள் பாடம் நடாத்திக் கொண்டிருப்பார்கள், அவர்களை போன்றே அல்லது அவர்களை விடவும் ஆற்றல்களும் திறமைகளும் உள்ளவர்கள் அரங்குகளில் வாழ்நாள் பார்வையாளர்களாக இருப்பார்கள்.
அரசியலில் ஒரு சிலரை விட சிறந்த ஆளுமைகள் சமூகத் தளத்தில் இல்லை என்பது போன்ற பிரமை அதிகார மையங்களால், ஊது குழல் ஊடகங்களால் திட்டமிட்டு ஏற்படுத்தப் படுவது போன்று சிவில் சன்மார்கத் தலைமைகளும் அமைப்புக்களும் ஒருவகை சினிமாத்தனமான ஹீரோ வெர்ஷிப் உருவாக்கத்தில் அறிந்தோ அறியாமலோ ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.
தலைவர்கள் ஒரு பொழுதும் ஆய்வு கூடங்களில்பட்டறைகளில் உருவாகுவதில்லை அவர்கள் சமூகத் தளத்தில்உருவாக்கப் படுகிறார்கள்.
துரதிஷ்ட வசமாக இன்றைய இளைஞர்கள் இஸ்லாமியகலாபீடங்களில் இருந்தும், உயர்கல்வி இருந்தும் வெளியேறியபின்னரும் அரசியல் சமூக பொருளாதார வாழ்வில் தம்மைபங்காளர்களாக தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்ளாது வெறும்பார்வையாளர்களாக அல்லது சில அமைப்புக்களின்வெளிவாரி மாணவர்களாக மாத்திரம் சௌகரியமாக இருந்துகொள்கின்றனர்.
நாம் எந்த அமைப்பிலும் இயக்கங்களிலும் இருக்கலாம்,பொதுவான இலாக்குகளுக்காக ஒன்று பட்டு சிந்திக்கலாம்செயற்படலாம் தவறு இல்லவே இல்லை, அனால்ஒவ்வொருவரும் தனது தலை விதியை இன்னும் சிலமனிதர்களிடம் அடகு வைத்து விடாது மிகவும் சுதந்திரமாகசிந்திக்க அதேபோன்று செயற்படவும் கற்றுக்கொள்ளவேண்டும், ஒவ்வொருவரும் தன்னை ஒருநிறுவனமாக கருதி பல்வேறு பரிமாணங்களிலும் தம்மைவளர்த்துக் கொள்ள வேண்டும்.
நாம் கூட்டாகவும் தனியாகவும் செயற்படுகின்ற பொழுது எமதுஉயரிய விழுமியங்களை பேணியவர்களாக தேசிய வாழ்வில்அடுத்த சமூகங்களுடனான எமது நல்லுறவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், சமூகம் சார்ந்த அமைப்புக்களில் மாத்திரம்எம்மை மட்டுப் படுத்திக் கொள்ளாது இன மதவேறுபாடுகளுக்கப்பால் பொதுவான இலக்குகளைகொண்டுள்ள நிறுவனங்களுடனும் எம்மை இணைத்துக்கொள்ள வேண்டும்.
சமூகத் தளத்தில் புதிய தலை முறை ஆளுமைகள் எல்லா மட்டத்திலும் உருவாக்கப் படல் வேண்டும்.
சமூகத் தளத்தில் புதிய தலை முறை ஆளுமைகள் எல்லா மட்டத்திலும் உருவாக்கப் படல் வேண்டும், அவர்களிற்கான அங்கீகாரமும், அவகாசமும் வழங்கப் படல் வேண்டும், சமூகத் தளத்தில் அரசியல், சிவில் சன்மார்க்க , தஃவா களங்களில் இரண்டாம், மூன்றாம் படிநிலை தலைமைகள் ஆளுமைகள் அறிமுகம் செய்யப் படுவதற்கான இயல்பான பொறிமுறைகள் இல்லாமை பெரிய குறைபாடாகும்.
ஒவ்வொரு தலை முறையினரும் புதிய ஒரு யுகத்திலேயே பிறக்கின்றார்கள், காலத்திற்குக் காலம் வெவ்வேறு நூதனமான சவால்களை நாம் எதிர் கொள்கின்றோம், அவற்றை எதிர்கொள்ள வெவ்வேறு புதுப்புது உத்திகளும் யுக்திகளும் தேவைப்படுகின்றன.
தலைமுறை இடைவெளியை கருத்தில் கொள்ளாத எந்தவொரு சமூகத் தலைமையும் சாதிக்கப் போவதில்லை, புதிய இளம் தலைமைகள் பட்டறைகளிலும் பாசறைகளிலுமன்றி சரியான தளத்திலும் களத்திலும் சந்தர்ப்பங்கள் வழங்கப் படுவதன் மூலம் பயிற்றுவிக்கப் படல் வேண்டும்.
இன்று பதவிகள் ஒரு சிலருக்கு அலங்காரமாகவும், சூதாட்டமாகவும் மாறிவருக்கின்றன, அதேவேளை எந்தப் பதவிகளையும் அலங்கரிக்க வல்ல பலர் ஓரங்கட்டப் பட்டுள்ளார்கள், சந்தர்ப்பங்கள் அடுத்தடுத்த படிமுறைகளிற்கு வழங்கப் படுகின்ற பொழுது அங்கு பெரறுப்புக்கூரல், வெளிப்படைத் தன்மை, ஆக்கத் திறன், சாதித்துக் காட்டுவதில் ஊக்கம் என பல சாதகமான அம்சங்கள் இருக்கின்றன, நன்றாக திட்டமிடப்பட்ட கௌரவமான ஆயுட்கால ஆக்கிரமிப்புகள் பல நிறுவனங்களையும் வெகுவாகப் பாதித்துள்ளன.
தஜ்ஜாலிஸம் :”பிழையான தரப்புக்களுக்கு வழங்கும் ஆதரவு, சரியான தரப்பிற்கு இழைக்கும் அநீதியாகும், எல்லா அநீதிகளும் வரம்பு மீறலாகும்”
நாம் ஒரு உம்மத்து என்ற வகையிலும், ஒரு சமூகம் என்ற வகையிலும், ஒரு தேசத்தவர் என்ற வகையிலும் சமகாலத்தில் எதிர் கொள்கின்ற சவால்களிற்கு முன்னால் எங்களை சரியான தளங்களில் நிலைப் படுத்திக் கொள்வதில் தோல்விக்கு மேல் தோல்வி கண்டு கொண்டிருக்கின்றோம்.
தலைமுறை இடைவெளியினை நாம் விசாலப் படுத்திக் கொண்டு செல்கின்றோம், தனியாட்களாயினும், குழுக்கள் ஆயினும் தம்மால் அடைய முடியாத அங்கீகாரமும் அதிகாரமும் சரியான பிறிதொரு தரப்பிற்கு சென்றடைவதனை நாம் விரும்புவதில்லை, மாறாக பிழையான தரப்புக்களை தக்க கொள்வதில் மறைமுகமான பங்களிப்பினை செய்து வருகின்றோம்.
இன்று ஒவ்வொருவரும் தமக்குரிய அங்கீகாரத்திற்கு ஏங்கித் தவிப்பதனால் அடுத்தவரை அங்கீகரிக்க தயக்கம் காட்டுகின்றார்கள், அடுத்தவருக்கு அங்கீகாரங்கள் கிடைத்து விடக் கூடாது என்பதில் அக்கறையாகவும் இருக்கின்றார்கள். அங்கீகாரங்கள் அமானிதங்கள் என்பதனை மறந்து விடுகின்றார்கள். இன்னும் சிலர் அக்கம்பக்கத்தில் வாழுகின்றவர்களை அங்கீகரிக்கக் கூடாது என்பதற்காக வருகைதரும் பிரபலங்களை தேடி ஓடுவார்கள்.
முண்டியடித்துக் கொண்டு பொறுப்புக்களை பதவிகளை ஆட்சியை அதிகாரத்தை தகுதியற்றவர்கள் தட்டிப் பறித்துக் கொள்வதனை அதற்காக சூழ்சிகள் செய்வதனை இஸ்லாம் தடுத்துள்ளது, அதேபோல் தகுதியற்றவர்களிடம் அவை சென்றடைவதை பார்த்துக் கொண்டிருப்பதும் அமானிதங்களை பாழாக்ககுவதாகும். குறுக்கு வழியில் ஒருவருக்குச் சேர வேண்டிய தொழிலை, அந்தஸ்தை, செல்வத்தை அடைய முணைவது அமானிதத்தை பாழாக்க்குவதாகும்.
பிழையான தரப்புக்களுக்கு நாம் வழங்குகின்ற அங்கீகாரங்கள் சரியான தரப்புக்களுக்கு இழைக்கப்படுகின்ற பாரிய அநீதியாக அமைந்து விடுகின்றது, நாம் விசுவாசிக்கின்ற கொள்கைகள்,கோட்பாடுகள், நாம் சொல்லித் தருகின்ற பாதை இலக்குகள் பயணங்கள் என்பவற்றிற்கு முற்றிலும் முரணான தரப்புக்களை எம்மால் ஒரு பொழுதும் விளம்பரப்படுத்தவோ, சந்தைப் படுத்தவோ முடியாது.